யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் என்பவர், மிகக் கொடூரமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) உத்தியோகபூர்வ மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பான மிக முக்கிய மரண விசாரணை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று விரிவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தச் சாட்சிப் பதிவுகளின் போது, உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும், வழக்கைப் புலனாய்வு செய்யும் காவல்துறையினரும் நீதிமன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர்.

அங்கு சாட்சியமளித்த காவல்துறையினர், “விரிவுரையாளரின் மரணத்திற்கான முதன்மைக் காரணம், பலவந்தமாகக் கழுத்து நெரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமையே எனச் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன” என நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

இருதரப்புச் சாட்சியங்கள் மற்றும் மரண விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் எஸ். லெனின்குமார், அதுவரை இக்கொலை வழக்கில் பிரதான சந்தேகநபர்களாகக் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.
இவ்விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்பான விரிவுரையாளர் தயாளினி திலீபனின் குடும்பத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் நேரடி வழிகாட்டலில், சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் நீதிமன்றில் முன்னிலையானார்.
அதேவேளை, முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனும், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் மூத்த சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








