கடந்த 2009 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) இருந்து பாரிஸ் நோக்கிப் பயணித்த ‘ஏர்பஸ் ஏ330’ (Airbus A330) விமானம் விபத்துக்குள்ளான வழக்கில், சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 228 பேரின் குடும்பங்களுக்கும் மொத்தமாக 720 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை இழப்பீடாக வழங்குமாறு ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, விமானத்தின் வேகத்தை அளவிடும் சென்சார்கள் (Sensors) பனியால் மூடப்பட்டுப் பழுதடைந்ததே விபத்துக்குக் காரணம் என இரு நிறுவனங்களும் வாதிட்டன. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2023 ஆம் ஆண்டு இரு நிறுவனங்களையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்துச் சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் பிரான்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Appeals Court) மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தத் துயரமான மரணங்களுக்கு ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களின் அலட்சியமும் கவனக்குறைவுமே காரணம் எனத் தீர்ப்பளித்தனர். தொழில்நுட்பக் கோளாறுகளை முன்கூட்டியே சரிசெய்யத் தவறியமை மற்றும் அவசர காலங்களில் செயல்படுவதற்கான முறையான பயிற்சி விமானிகளுக்கு வழங்கப்படாமை ஆகியவையே விபத்துக்கு முதன்மைக் காரணங்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2.51 கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 720 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, பிரான்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் (Highest Court) தாங்கள் முறையீடு செய்யவுள்ளதாக இரு விமான நிறுவனங்களும் தற்போது அறிவித்துள்ளன.








