கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் தற்கொலை மரணங்களின் விகிதம் சுமார் 70% குறைந்துள்ளதாகச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக நாடுகள் அனைத்தும் தங்களது தேசிய தற்கொலைத் தடுப்பு உத்திகளில் பூச்சிக்கொல்லிக் கட்டுப்பாடுகளை ஒரு முக்கிய அங்கமாகச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் (WHO) 79 ஆவது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக, “பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுத்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற விசேட அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி தொடங்கிய 79 ஆவது உலக சுகாதாரப் பேரவையின் மாநாடு, இன்றைய தினத்துடன் (23) நிறைவடைகின்றது. இதில் 194 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், தூதுவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை, கயானா, கென்யா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்த விசேட அமர்வுக்கு, உலக சுகாதார அமைப்பு (WHO), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்கியிருந்தன.
“1990 ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்ததன் மூலம், இலங்கையில் தற்கொலை மரணங்களை 70% வரை குறைக்க முடிந்துள்ளது. இதுவே இதற்கான சிறந்த ஆதார அடிப்படையிலான வெற்றியாகும். குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் பலன்களைத் தரக்கூடிய இப்பூச்சிக்கொல்லிக் கட்டுப்பாட்டு முறையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என முன்மொழிகிறேன்.
இப்பணிகளுக்காக வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான ஆதரவை வழங்குவது உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச நிறுவனங்களின் இன்றியமையாத கடமையாகும். இதில் இலங்கை தனது அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராகவே உள்ளது.
அதேநேரம், தற்கொலை மரணங்களைத் தடுக்கப் பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது மட்டும் போதாது; சமூக அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். இலங்கை தற்போது தனது ஆரம்ப சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தி வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்கொலை மரணங்களின் விகிதத்தைக் குறைப்பதில் இலங்கை தற்போது உலக அளவில் முன்னணியில் திகழ்கிறது. கடந்த 1995 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பேருக்கு 47 ஆகக் காணப்பட்ட தற்கொலை மரணங்களின் விகிதம், 2022 ஆம் ஆண்டளவில் 14 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நச்சுப் பூச்சிக்கொல்லிகள் மீதான தடையோ இதற்கு முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.
இதேவேளை, தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச சங்கம் (IASP) தனது 34 ஆவது உலக மாநாட்டை வரும் 2027 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த அமர்வின் போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








