டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் இரகசியமாகப் பதுங்கியிருந்த நிலையிலேயே அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த நம்பகமான இரகசியத் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் தீர்க்கமான கைது நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கருதப்படும் பெருந்தொகையான தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் கொடூரக் கொலைக்கான காரணம் மற்றும் பின்னணிகள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர் தற்போது ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








