மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில் இன்று (30) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 6.00 மணியளவில் வங்கி கட்டிடத்திலிருந்து கரும்புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதை அவதானித்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் வங்கியில் ஊழியர்களோ வாடிக்கையாளர்களோ எவரும் இல்லாத காரணத்தால் உயிர்ச்சேதங்களோ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், அதன் உண்மையான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்தால் ஏற்பட்ட சொத்து சேதத்தின் அளவு இதுவரை கணக்கிடப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











