சென்னையின் கோயம்பேட்டில் காரால் மோதப்பட்டு இலங்கைப் பெண் உயிரிழந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தியிருந்தார். அந்த தோழியைச் சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த அவர், இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு மற்றொரு குழுவினருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக, இரு தரப்பினரையும் விடுதியின் பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்த யான்சி மற்றும் அவருடன் இருந்த 17 வயது சிறுமி மீது, தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினர் காரை வேகமாக செலுத்தி மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேவேளை, பலத்த காயமடைந்த சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சுயநினைவின்றி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவரது நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கு பயன்படுத்தப்பட்ட காரில் ஒரு அரசியல் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சம்பவம் இடம்பெற்ற கேளிக்கை விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








