கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இணையவழி நிதி மோசடிகள் தொடர்பாக 360-க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அதன் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல, இணையம் ஊடாக நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் அதிக அவதானத்துடன் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
கடந்த பண்டிகைக் காலங்களில் பதிவான மோசடிகளைப் போலவே, வெசாக் மற்றும் பொசோன் பண்டிகைகளை முன்னிட்டு பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட போலி விளம்பரங்கள் மூலம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கடன் அட்டை விவரங்கள் திரட்டப்பட்ட சம்பவங்கள் கடந்த மாதம் முழுவதும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, இணையத்தில் ஏதேனும் ஒரு கொடுப்பனவை மேற்கொள்ளும் முன், அது உண்மையான மற்றும் பாதுகாப்பான இணையதளமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குறுஞ்செய்திகள் அல்லது அறிமுகமற்ற மூலங்களின் மூலம் அனுப்பப்படும் இணையதள இணைப்புகளில் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் அல்லது கடன் அட்டை தகவல்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிவிடக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என SLCERT வலியுறுத்தியுள்ளது.








