ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றை தாக்கி செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/டி லெக்ஸி என்ற எண்ணெய் கப்பலின் பணியாளர்கள், அமெரிக்கப் படையினரின் பல்வேறு எச்சரிக்கைகளையும் மீறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமெரிக்க விமானம் ஒன்று கப்பலின் எஞ்சின் அறையை இலக்காகக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் அறிவித்துள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட தருணத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் காணொளியையும் அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஈரான் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
ஈரானிய துறைமுகங்களுக்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை இலக்காகக் கொண்ட கடற்படை முற்றுகையை அமெரிக்கா கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் அமுல்படுத்தி வருகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை பணியகத்தின் அறிக்கையின்படி, சர்வதேச கடற்பரப்பில் கார்க் தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எம்/டி லெக்ஸி கப்பலுக்கு எதிராக முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் பலமுறை வழங்கப்பட்ட உத்தரவுகள் மற்றும் எச்சரிக்கைகளுக்கு கப்பல் பணியாளர்கள் இணங்கத் தவறியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடற்படை முற்றுகை அமுல்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை ஆறு வணிகக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 122 கப்பல்கள் தங்களது பயணப் பாதையை மாற்றி வேறு திசைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.








