கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருசுட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற டிராக்டர் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குருசுட்டிக்குளம் ஆலயத்திற்குச் சொந்தமான காணி ஒன்றை துப்புரவு செய்யும் பணிக்காக குறித்த இளைஞர் டிராக்டரை இயக்கியுள்ளார்.
இதன்போது, டிராக்டரை இயக்க முயன்ற வேளையில் அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதனை சரிசெய்ய முயன்றபோது டிராக்டர் திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இதனால், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் குருசுட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








