யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் வெசாக் கூடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, முழு தமிழ் மாணவர் சமூகத்தின் மீது பழிசுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் ஜூன் 2ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு, மாணவர் ஒன்றியத்தின் முழுமையான அனுமதி மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ் மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, தனிநபர்கள் சிலர் ஒரு வெசாக் கூட்டை சேதப்படுத்தியிருக்கலாம் எனக் கூறியுள்ள ஒன்றியம், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் எந்தவொரு செயலையும் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், தனிநபர்களின் செயலுக்காக ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தையும் குற்றம் சாட்டுவது நியாயமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தை இனரீதியான பிரச்சினையாக மாற்ற முயலும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் ஏற்க முடியாது எனவும், மாணவர்கள் அனைவரும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








