ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் ரூ. 30.5 மில்லியன் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2.55 மணியளவில், வங்கி ஊழியர் ஒருவர் வங்கியின் பின்பக்க கதவினூடாக இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்ற போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவற்றை பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு திருடப்பட்ட பணம், வங்கியின் ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் வைப்பு செய்ய எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 30.5 மில்லியன் எனவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








