கந்தளாய் குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் நீண்டகாலமாக இரகசியமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் பாரிய அளவிலான சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் சுற்றிவளைத்து கண்டுபிடித்துள்ளனர்.
கந்தளாய் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவரது மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த விசேட நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையின் போது, காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பெரிய பரல்களும் ஒரு சிறிய பரலும் கைப்பற்றப்பட்டன. அவற்றில் கள்ளச்சாராய உற்பத்திக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சத்து 90 ஆயிரம் மில்லிலிட்டர் கோடா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கோடா பின்னர் சம்பவ இடத்திலேயே அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொலிஸாரின் வருகையை அறிந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோத கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








