இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை மேம்படுத்தும் நோக்கில், “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஊடகத் துறையில் செயல்படும் பல்வேறு தரப்பினரையும் ஒரே தொழில்சார் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
புதிய நிறுவகத்தில் ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் தொழில்முறை அங்கீகாரத்துடன் உறுப்பினர்களாக இணைக்கப்படவுள்ளனர்.
மேலும், ஊடகக் கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகள், தொழில்சார் பரீட்சைகள், ஆராய்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுப்பதுடன், உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தைக் கோவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிறுவகத்தின் நிர்வாகத்திற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவை அமைக்கப்படவுள்ளது. இதில் 8 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மீதமுள்ள 7 பேர் நியமன அடிப்படையில் இணைக்கப்படுவார்கள்.
நிரந்தர பேரவை அமைக்கப்படும் வரை, அமைச்சரின் அதிகாரத்தின் கீழ் இடைக்கால ஆளும் பேரவையொன்றும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத் துறையில் தரம், பொறுப்புணர்வு மற்றும் தொழில்முறைத்தன்மையை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்த சட்டமூலம் பார்க்கப்படுகிறது.








