அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் கவலைகளுக்கு நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம் அளித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வு அல்லது ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு பொருளாதார நெருக்கடியின் அறிகுறியாகக் கருதப்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலையால் உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களின் பிரதிபலிப்பாகவே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையால் இலங்கை பொருளாதாரத்தில் சில தற்காலிக அதிர்வுகள் ஏற்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்தவும் சமாளிக்கவும் தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தையில் காணப்படும் ஊக வணிக நடவடிக்கைகள் மற்றும் தேவையற்ற அச்சம் காரணமாக டொலர் மாற்று விகிதத்தில் குறுகியகால மாற்றங்கள் ஏற்படக்கூடும் என தெரிவித்த அவர், அண்மையில் 350 ரூபாயைத் தாண்டியிருந்த டொலரின் பெறுமதி அரசின் தலையீடுகளால் 330 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டதாகவும் கூறினார்.
கடந்த சில நாட்களில் மீண்டும் சிறியளவிலான உயர்வு பதிவாகியிருந்தாலும், நிலைமை விரைவில் சீரடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர், இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அல்லது வெளிநாட்டு நிதி நெருக்கடியைக் குறிக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதனால், டொலர் மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் அரசின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








