அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு வர விரும்புவதாகவும் கூறினார்.
அத்துடன், தங்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, தேவையான அனைத்து விடயங்களிலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.
“நாங்கள் அந்தப் போரில் வெற்றிபெற்று வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் போது, அது உண்மையான வெற்றியாக இருக்கும். அது முழுமையான வெற்றியாக அமையும். மேலும், அது மிக விரைவில் நடைபெறும். அதன்பின் எண்ணெய் விலைகளும் வேகமாகக் குறையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என ட்ரம்ப் உறுதியளிப்பது இது முதல் தடவையல்ல என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், “ஈரான் உண்மையில் உடன்படிக்கைக்கு வர ஆர்வமாக இருந்தால், ஏன் இதுவரை அதற்கு இணங்கவில்லை?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் பலமானவர்கள். அவர்கள் பெருமைமிக்கவர்கள். அவர்கள் ஒருபோதும் செய்வார்கள் என்று நினைக்காத சில விடயங்களை இப்போது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு வழியில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.








