நானுஓயா – ஹட்டன் (ஏ7) பிரதான வீதி ஆரம்பிக்கும் சந்திப்பில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி மண் மேட்டில் மோதி சேதமடைந்துள்ளது.
வலப்பனை பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் பயணித்திருந்ததுடன், இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமை மற்றும் தடுப்புக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நழுவிச் சென்று மண் மேட்டில் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் லேசான மழை மற்றும் அடிக்கடி நிலவும் கடும் மூடுபனி காரணமாக பிரதான வீதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நானுஓயா பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மழை, மூடுபனி மற்றும் எண்ணெய் அல்லது தண்ணீர் கசிவு காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறும், குறிப்பாக நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடும் மூடுபனி அல்லது மழைக் காலங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் பனிமூட்ட விளக்குகளை ஒளிரவிட்டு பயணிக்குமாறும் சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








