வங்கிக் கடன் பெறுவதற்காக மகனின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த குடியிருப்புச் சொத்தின் உண்மையான உரிமையாளர் தாயே என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் முன்னெடுத்திருந்த சுமார் 30 ஆண்டுகால சட்டப் போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே தனது மகனின் பெயருக்கு மாற்றியதாக தாய் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடனை அடைத்த பின்னர் வீட்டை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சொத்து மாற்றப்பட்டதாகவும், வீட்டின் முழுமையான உரிமையை மகனுக்கு வழங்கும் நோக்கம் தனக்கில்லை என்றும் அவர் வாதிட்டார்.
எனினும், குறித்த வீட்டை 125,000 ரூபாவிற்கு தாம் வாங்கியதாக மகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றமும் பின்னர் மேல் நீதிமன்றமும் தாய்க்கு சாதகமாக தீர்ப்பளித்திருந்தன.
அதனை எதிர்த்து மகன் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஏகமனதாக உறுதிப்படுத்தி மகனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் 83ஆவது பிரிவின் கீழ், சொத்து மாற்றப்பட்ட சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அதன் உண்மையான உரிமையாளரை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் என நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.
தாய் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிய ஒரேயொரு குடியிருப்பு இதுவாகும் என்பதையும், பெற்ற வங்கிக் கடன் வீட்டை விரிவுபடுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருந்ததையும் கருத்தில் கொண்டு, குறித்த வீட்டின் உண்மையான உரிமையாளர் தாயே என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.








