மலையகப் பகுதிகளில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு புனரமைக்க முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்காக 50 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் திட்டங்களில் மலையக மக்களும் உள்ளடக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, சொந்த வீடு மற்றும் காணி கொண்டவர்களின் வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவில் சேதமடைந்திருந்தால் 25 இலட்சம் ரூபாயும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், மலையக மக்களில் பெரும்பாலானோர் வசிக்கும் லயன் வீடுகள் மற்றும் காணிகள் அவர்களது பெயரில் பதிவு செய்யப்படாத காரணத்தால், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சிக்கல்கள் காணப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனை கருத்தில் கொண்டு, லயன் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வீடுகள் அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கவும், பகுதியளவிலான சேதங்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவும் புதிய அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி புனரமைக்க முடியாத அளவுக்கு பழுதடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கவும் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான புதிய வீடுகளை அமைப்பதற்கான காணிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சில காணிகளுக்கான இறுதி அனுமதிகள் இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வழங்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அவை விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு காண அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் குறிப்பிட்டார்.








