ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது.
சற்று நேரத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ஓமான் கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்க இராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நடவடிக்கைகள் தற்காப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை எனவும் விளக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது நடைபெற்று வரும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்தாது என அமெரிக்கா நம்புவதாகவும் கூறியுள்ளார்.
முதற்கட்டத் தாக்குதல்களில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்த கட்டத் தாக்குதல்களும் இடம்பெறக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஈரானின் ஷாஹெட் (Shahed) ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டர் உள்ளானதாக கூறப்படுகிறது. எனினும், அது திட்டமிட்ட தாக்குதலா அல்லது தவறுதலாக நிகழ்ந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.








