வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் அமைந்துள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வனாதவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (09) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின் படி, உயிரிழந்தவர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்திற்குள் முந்திரி பறிக்கச் சென்றபோது அங்கிருந்த காவலாளிகளிடம் சிக்கியுள்ளார். இதன்போது ஏற்பட்ட மோதலில் அவர் தாக்கப்பட்டதுடன், பின்னர் ஏர் ரைபிள் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்தத் தோட்டத்தின் 8 காவலாளிகள் 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 41 வயதுக்கிடைப்பட்ட ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








