குவைத்தில் போதைப்பொருள் தொடர்பான தனித்தனி சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மூன்று இலங்கையர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு குவைத் பிரஜை, ஒரு இந்தியர், மூன்று இலங்கையர்கள் மற்றும் இரண்டு நாடற்றவர்கள் அடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்திருந்த பல்வேறு வகையான போதைப்பொருட்கள், மனநிலையை பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மற்றும் அவற்றை பொதி செய்து விநியோகிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 2.550 கிலோகிராம் ஹஷிஷ், 150 கிராம் ஹெரோயின் மற்றும் 20 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது நடவடிக்கையின்போது சந்தேகநபர் ஒருவர் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படுவதால், அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள குவைத் உள்துறை அமைச்சகம், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளது.








