டிக்டொக் செயலி ஊடாக போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு
சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புறநகர் பகுதிகளில் கடந்த
வெள்ளிக்கிழமை (5) முதல் திங்கட்கிழமை (8) வரையான காலப்பகுதியில் திடீர் போக்குவரத்து விசேட
சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார்
சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த நடவடிக்கையின் போது தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி
அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட
குற்றங்களுக்காக 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப பட்டு அவற்றை செலுத்தியவர்களும் சட்ட
நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தவிர டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து
காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
மேலும் இச்சோதனை நடவடிக்கையின்போது சாரதி அனுமதிப்பத்திரம், வருமான வரிச் சான்றிதழ்
காப்பீட்டுச் சான்றிதழ் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக
வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றங்களுக்காக நடவடிக்கைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இவர்களில் ஒருவருக்கு நீதிமன்றத்தால் 38, 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. ஏனைய
சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை
பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்
மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய
மேற்கொள்ளப்பட்டிருந்தது.









