ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘#இமு’ எனும் புதிய முழுநீளத் தமிழ் திரைப்படத்தின் பூஜை விழா மட்டக்களப்பில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது.
திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் ஆரம்பமானது. தயாரிப்பாளர் ரோஜஸ் டி சில்வாவின் தாயார், ஆலய சன்னிதானத்தில் முதல் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை சம்பிரதாயபூர்வமாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயம், மங்களராமய ரஜமஹா விகாரை மற்றும் கோட்டைமுனை ஹியாபுத்தீன் வலியுல்லாஹ் தர்ஹா ஆகிய இடங்களிலும் விசேட ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பின் இளம் இயக்குநரான கீ. கிஷாந்தின் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பிரதிஜன் மற்றும் தனுஷ்கா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கின்றனர். யுவநாதன், துஷி, சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெறுகின்றனர்.

திரைப்படத்தின் ஒளிப்பதிவை நிருஷாந்த் மேற்கொள்கின்றார். இசை மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இயக்குநர் கீ. கிஷாந்தே கவனித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாக, மட்டக்களப்பின் முன்னணி தயாரிப்பாளரும் கதாசிரியருமான முரளிதரன் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகின்றார். அவரது நடிப்பு திரைப்படத்திற்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் உருவாகும் ‘#இமு’ திரைப்படம், ஈழத்துத் தமிழ் சினிமாவிற்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவது பல சவால்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், உள்ளூர் படைப்புகளுக்கு தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்கள் ஆதரவு வழங்க வேண்டிய அவசியம் இருப்பதாக கலை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


















