2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையின்படி, இலங்கை 14 இடங்கள் முன்னேறி உலகளவில் 67ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, நாடுகளின் பாதுகாப்பு நிலை, சமூக ஸ்திரத்தன்மை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதல்களின் அளவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய அமைதி தொடர்ந்து 12ஆவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், உலக அமைதி நிலை 0.7 சதவீதத்தால் குறைந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இந்த குறியீட்டின் அடிப்படையில், அக்காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 119 நாடுகள் தற்போது குறைந்த அமைதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
163 நாடுகள் உள்ளடக்கப்பட்ட இந்த தரவரிசையில், ரஷ்யா கடைசி இடத்திலும், சூடான் 162ஆவது இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 99 நாடுகளின் அமைதி நிலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், 62 நாடுகள் தங்களது அமைதி நிலையை மேம்படுத்தியுள்ளன.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதிக்கான அதிகளவான முன்னேற்றத்தை இலங்கை பதிவு செய்துள்ளதாகவும், அது 2.3 சதவீத வளர்ச்சியாக இருப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தெற்காசிய நாடுகளுக்கிடையில் பூட்டான் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஆப்கானிஸ்தான் தெற்காசியாவின் குறைந்த அமைதியுடைய நாடாக பதிவாகியுள்ளதுடன், இந்தியா அந்தப் பிராந்தியத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.








