இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினராலும், சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் தனக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கும், தனது தொகுதி மக்களை நேரில் சந்திப்பதற்கும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தனது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை சபையில் பலமுறை எடுத்துரைத்த போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ துப்பாக்கி தொடர்பிலும் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்த அவர், அதனை ஒருபோதும் தவறான முறையில் பயன்படுத்தவில்லை எனவும் வலியுறுத்தினார்.
தனது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றம் உடனடியாக தலையிட்டு அவசர மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அர்ச்சுனா எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.







