கந்தளாய் ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்று (11) காலை உணவு உட்கொண்ட 16 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவின் போது சுமார் 150 மாணவிகளுக்கு அன்னாசிப்பழம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதனை உட்கொண்ட பின்னர், 16 மாணவிகளுக்கு திடீரென அரிப்பு மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமையை உணர்ந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது மாணவிகள் அனைவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமானதல்ல என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








