மொனராகலை மாவட்டத்தின் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்காயங்களால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் ரினோஷா உம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரின் தகவலின்படி, சம்பவத்தன்று இரவு உணவுக்குப் பின்னர் அவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உறங்கச் சென்றுள்ளார். பிள்ளைகள் தனியான அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் அறையில் தீப்பிழம்பு எரிவதைக் கண்டு ஓடிச் சென்றுள்ளனர்.
அப்போது தாய் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை பார்த்த பிள்ளைகள் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை அணைத்து, அவரை உடனடியாக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தவரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் அவரது கணவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கோழி இறைச்சி விற்பனைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் எனவும், சம்பவத்திற்குப் பின்னர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கணவன்-மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் விளைவாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








