கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களமும் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அபிவிருத்தி பயிற்சி நிலைய பிரதேச மட்டக் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு நேற்று (10) கோரகல்லிமடு கிரான் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கோறளைப்பற்று தெற்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க. ரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பா. கோகுலராஜன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஷ்ட தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி என். ரவிச்சந்திரன் கலந்துகொண்டதுடன், மாவட்டத்தின் பல கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது, அதிதிகளால் கண்காட்சி மண்டபம் திறந்து வைக்கப்பட்டதுடன், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டு கொள்வனவு செய்தனர்.
இதேவேளை, கோரகல்லிமடு பிரதான வீதியில் அமைந்துள்ள “வாகை தையலகம்” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், முருங்கன் தீவு மற்றும் திகிலிவெட்டை மக்களின் நீண்டகால நீர்வழிப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு PSDG வேலைத்திட்டத்தின் கீழ் படகு கொள்வனவிற்காக தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், பல மாதர் சங்கங்களுக்கு சுயதொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்றிய மாதர் சங்க பிரதிநிதிகள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற அதிதிகளும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.














