உணவு தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும் மற்றும் உட்கொள்வதற்கும் தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவது மாரடைப்பு, புற்றுநோய், ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான இதனைத் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பெட்டிகள் மற்றும் பொலித்தீன் பொதிகளில் உணவுகளை நீண்டகாலமாக பயன்படுத்துவதன் மூலம் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எனப்படும் நுண்துகள்கள் மற்றும் பிபிஏ (BPA) போன்ற நச்சு இரசாயனங்கள் உடலுக்குள் நுழைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நச்சுத் துகள்கள் இரத்த ஓட்டத்தின் மூலம் மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் படிந்து அவற்றின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற கடுமையான நோய்கள் உருவாகலாம் என்றும், பிபிஏ போன்ற இரசாயனங்கள் ஹோர்மோன் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு தொற்றா நோய்களுக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
நீண்டகால பாதிப்புகளால் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அபாயமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பில் மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள், கண்ணாடி மற்றும் செராமிக் உபகரணங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








