மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் தற்போது பணியாற்றி வரும் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (11.06.2026) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையின் நுழைவாயில் மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்குள் செல்ல முடியாமல் போனது. இதன் காரணமாக அன்றைய தினம் பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
பெற்றோர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு ஏறாவூர் பொலிஸார் வருகை தந்ததுடன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எம். ஜவாத், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரி ஏ. எல். அபுல்ஹஸன் ஆகியோரும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பாடசாலை நீண்டகாலமாக தகுதியான அதிபர் மற்றும் போதிய ஆசிரியர்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவதால் கல்வித் தரத்தில் பின்தங்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றி வந்தவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இடமாற்றத் தீர்மானம் ரத்து செய்யப்படும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் என பெற்றோர் தெரிவித்ததுடன், பாடசாலை வளாகத்திற்கு வந்திருந்த மாணவர்களையும் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர், தற்போது பதில் அதிபராக பொறுப்பில் உள்ள அதிகாரி தொடர்பாக அலுவலக மட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை நிறைவடையும் வரை அவர் தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பில் விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலையின் நுழைவாயில் திறக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள் தமது வருகையைப் பதிவு செய்தனர்.
தரம் 1 முதல் 5 வரை வகுப்புகள் நடைபெறும் இப்பாடசாலையில் தற்போது 138 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.








