சிட்னி நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
UL-606 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிட்னி நோக்கிப் புறப்பட்டது. ஏர்பஸ் A330 வகையைச் சேர்ந்த விமானத்தில் 217 பயணிகளும் 16 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் மின்னல் தாக்கத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய விமானி, பயணத்தைத் தொடராமல் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குத் திருப்பினார்.
அதன்படி, அதிகாலை 1.40 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகளை சிட்னிக்கு அனுப்புவதற்காக, ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் நிறுவனம் மற்றொரு ஏர்பஸ் A330 விமானத்தை ஏற்பாடு செய்தது. அந்த மாற்று விமானம் இன்று காலை 6.06 மணியளவில் சிட்னி நோக்கிப் புறப்பட்டது.
மின்னல் தாக்கத்துக்குள்ளான விமானம் தற்போது மேலதிக தொழில்நுட்ப பரிசோதனைகள் மற்றும் தேவையான பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்காக ஸ்ரீலங்கன் எர்லைன்ஸ் பராமரிப்பு ஹேங்கருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








