யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட பதாகை ஒன்றை கிழித்து எடுத்துச் சென்றதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதி, சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் சுமார் 10 அடி உயரமான குறித்த பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் அவமதிப்பான வாசகங்களும், அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் அந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, குறித்த பதாகையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு தனது காரில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், அந்தப் பதாகையை கிழித்து எடுத்து தனது காரில் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அவரது நடத்தை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.








