இலங்கைத் தமிழரசுக் கட்சி, தற்போதைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மாறாக ஒற்றையாட்சி முறைமைக்குள் (ஏக்கிய ராச்சிய) பயணித்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தமிழ் மக்களின் வரலாற்றில் இது முக்கியமான ஆண்டு என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்னெடுத்த தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று அதற்கு மாறான அரசியல் பாதையில் செல்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முன்வைக்கும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபு உருவாக்கத்தில், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும், அந்த “ஏக்கிய ராச்சிய” வரைபை தமிழ் மக்களின் தீர்வாக முன்வைக்க முயற்சிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாடு, 1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முற்றிலும் எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தந்தை செல்வா வழிவந்த தமிழரசுக் கட்சி இன்று ஒற்றையாட்சி அமைப்பை ஆதரிப்பது, அந்த வரலாற்று நிலைப்பாட்டுக்கும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் எதிரான “அரசியல் துரோகம்” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.








