இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 89 நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் டொலர் நிதி மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனங்களையும் வங்கிக் கணக்குகளையும் தொடங்கி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்காகப் போலி ஆவணங்களைத் தயாரித்து, பல்வேறு நபர்களின் தேவைகளுக்காகப் பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பெரியமுல்லை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை தனது நிறுவன கணக்குகளில் வைப்பு செய்து, அவற்றை கவனமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பைக் குறைத்துக் காட்டி, சுங்க மற்றும் தீர்வைகள் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி, போலி இறக்குமதி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவர் பணம் அனுப்பி வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதித்த பணத்தை சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம், நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கடுமையான குற்றங்களைச் செய்துள்ளார் என்பதை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கை சுங்கத்துறையால் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 2023 ஜனவரி 1 முதல் 2025 செப்டம்பர் 15 வரை, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 89 உள்ளூர் நிறுவனங்களைப் பயன்படுத்தி பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, தந்தி வழிப் பணப் பரிமாற்ற முறை (TT – Telegraphic Transfer) மூலம் உள்ளூர் வங்கி அமைப்பின் வழியாக பெரும் தொகையான அமெரிக்க டொலர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு, நாட்டிற்குள் எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்யாமலேயே இந்த பெரிய அளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.








