கல்வி,உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் பிரதம மந்திரி திருமதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
இவ் ஆலோசனைக்கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை ” சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை – 1ம் தர அதிபர் வெற்றிடம், பிரதி அதிபர்கள் வெற்றிடங்களும் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 2775 மாணவர்களும் 142 ஆசிரியர்களும் நிர்வாக ரீதியிலும், கல்விச் செயற்பாடுகளிலும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
எனவே கல்வி அமைச்சு அவசரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை கௌரவ பிரதம மந்திரி அவர்கள் மேற் கொள்ள வேண்டும் என மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தனது முன்மொழிவில் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கமலை பிரதம மந்திரி பணிப்புரை வழங்கினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கமல் “சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் 1ம் தர அதிகாரி ஒருவர் அதிபர் பதவியை வகிக்க வேண்டிய ஒரு கல்வி நிறுவனமாகும். மேலும் அப் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.
2025 நவம்பர் 02 , டிசம்பர் 05, மற்றும் 2026 ஜனவரி 03 ஆகிய திகதிகளில் இலங்கை கல்வி நிர்வாக சேவை – 1 ம் தர ஒருவர் அதிபர் பதவியினை வகிக்க வேண்டிய பதவி வெற்றிடமாக காணப்பட்ட தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்காக பொருத்தமான அலுவலர் ஒருவரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றதுடன் இந்த பாடசாலையின் அதிபர் பதவிக்கு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் நடைபெற உள்ள அடுத்த நேர்முகத்தேர்விற்கு உரிய வெற்றிட பட்டியலுக்கு இப் பாடசாலையை மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதுவரை அதிபர் பதவியில் கடமைத்தழுவல்களுக்காக இலங்கை அதிபர் சேவையின் தரம் – 1 ம் தர A.R.M.உவைஸ் அவர்களை எனது ED/4/58/20/16/04 ம் இலக்க மற்றும் 2025/11/06 ம் திகதிய கடிதம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் 2026/04/02ம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிபர் சேவை – 1இன் திருமதி S.S.M. மசூதுலெப்பை அவர்கள் இக்கல்லூரியின் பிரதி அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பதிலளித்தார்








