நாடாளுமன்றத்தில் கைது, விசாரணை மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களில் ஈடுபடாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் குடும்பங்கள் கடுமையான பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்ப்பது வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கான தீர்வுகளே தவிர, கைது மற்றும் விசாரணைகள் தொடர்பான கருத்துரைகள் அல்ல என்றார்.
விசாரணைகள் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே கருத்து வெளியிடுவதற்காக நாடாளுமன்ற மேடையை பயன்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், குற்றச்சாட்டுகள் இருப்பின் அவை சட்டத்தின் அடிப்படையில் சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
“சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எந்தவொரு விசாரணைக்கும் அல்லது சட்ட நடவடிக்கைக்கும் முகங்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எதிலிருந்தும் தப்பிச் செல்லும் நோக்கம் எமக்கில்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் குடும்பச் செலவின அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கைது மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைச் செலவு, பொருளாதார சவால்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் நிலவும் ஊழல் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
“நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு தீர்வு காண்பதே இன்றைய சூழலில் நாட்டின் மிக அவசரமான தேவையாகும்,” என்றும் அவர் தெரிவித்தார்.








