யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயரான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை திருத்தந்தை 14ஆம் லியோ இன்று (29) நியமித்துள்ளார்.
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் சமய, கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்து பணியாற்றியுள்ளார்.
அவர் உரோமில் இறையியலில் பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம், கொழும்பில் கல்வியியல் டிப்ளோமா, ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணி பட்டங்களையும் பெற்றுள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
தற்போதைய யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரான பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் ஓய்வைத் தொடர்ந்து, பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.








