பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு மையம் ஒன்றில் ஏற்பட்டவிபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வகுப்பில் பாடம் கற்றுக்கொண்டிருந்த வேளையில், கட்டிடத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கூரை நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாணவர்கள் வகுப்பில் இருந்தபோதே கூரையின் பழுதுபார்க்கும் பணிகளும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கூரையின் மீது அதிகளவில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததே அது இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அதிகாரப்பூர்வ விசாரணை நிறைவடைந்த பின்னரே விபத்திற்கான உண்மையான காரணம் அறிவிக்கப்படும்.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப், “இது நெஞ்சை பதறவைக்கும் பேரவலம். இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.








