இந்த ஆண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டாலும், இந்த ஆண்டின் முதல் அரையாண்டைப் போலவே அடுத்த ஆறு மாதங்களிலும் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.
வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்காததால், கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்தக் காலப்பகுதியில் மின்சாரக் கட்டணம் 18 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் நீர் உற்பத்திச் செலவில் குறைந்த அளவிலேயே பதிவாகியுள்ளதாக அவர் விளக்கினார்.
நீர் உற்பத்திச் செலவில் மின்சாரத்தின் பங்கு சுமார் 12 சதவீதம் மட்டுமே என்பதால், மின்கட்டண உயர்வால் ஒரு அலகு நீரின் உற்பத்திச் செலவில் சுமார் 2 ரூபாய் 50 சதம் மட்டுமே கூடுதலாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனால், மொத்த உற்பத்திச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாத நிலையில், அடுத்த ஆறு மாதங்களிலும் நீர் கட்டணத்தை மாற்றாமல் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.








