வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வயல் நிலமொன்றில் 58 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் 37ஆம் கிராமம், கூழாவடி நெல்லிக்காடு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (01) மாலை வீட்டிலிருந்து வெளியேறிய அவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, இரவு 7 மணியளவில் வயல் காணிக்குள் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவலைத் தொடர்ந்து வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்று (02) காலை களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








