உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கான நீதியரசர்களை நியமிப்பதில் நிறைவேற்று அதிகாரம் தாமதம் ஏற்படுத்துவது தொடர்பாக, ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் சட்ட ஆட்சிக்கு முரணானது என உண்மை தேடுபவர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை என்பது நீதியரசர்கள் தீர்ப்புகளை எழுதும் சுதந்திரத்திலேயே மட்டுமல்லாது, அவர்களின் தொழில்முறை வாழ்க்கையை தீர்மானிக்கும் நிறுவனக் கட்டமைப்பில் நிலவும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையின் மீதும் தங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.








