சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 12 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டின் ஜூன் 16 முதல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், நாட்டின் கடல் எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 10 டிங்கி படகுகள், 2 கேனோ படகுகள், வணிக வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை சூடைகுடா, ஸ்விட் பே, யாழ்ப்பாணம் உடுத்துறை, வெத்தலைக்கேணி, கட்டைக்காடு மற்றும் சிலாவத்துறை சாவாரிபுரம் கடற்கரை உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைப் பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களுக்கும், மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.









