பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழரான தம்பையா பிரகாஷுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இவ்வளவு நீண்ட காலம் வழக்கின்றி ஒருவரை தடுத்து வைத்திருப்பது “விதிவிலக்கான சூழ்நிலை” எனக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கிய பிணை மறுப்பு உத்தரவை இரத்து செய்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட போது 26 வயதாக இருந்த பிரகாஷ், தனது இளமைக் காலத்தின் முக்கியமான பகுதியை வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருந்தபடி சிறையில் கழித்ததாக நீதியரசர்கள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட அவருக்கு எதிராக 2012 செப்டெம்பரில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 230 குற்றச்சாட்டுகளும், 106 அரசுத் தரப்பு சாட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பயணத் தடை, கடவுச்சீட்டை ஒப்படைத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.








