முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ள 17,469.58 ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து, உரிய மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், யுத்தகாலத்தில் மக்கள் தங்களது காணி ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே விடுவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடம் ஆவணங்களைக் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 1,231.37 ஹெக்டயர் காணிகளை விடுவிப்பதற்கு மக்கள் காணி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகளால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விடுவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு மீண்டும் மக்களிடம் ஆவணங்களைக் கோருவது எவ்வாறு நியாயமானதாகும் என கேள்வி எழுப்பினார்.
யுத்த காலத்தில் மக்கள் தங்களது ஆவணங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும், எனவே அந்தக் காலகட்டத்தின் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாமல் காணி ஆவணங்களைக் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில்,
- கரைதுறைப்பற்று – 3,013.96 ஹெக்டயர்
- புதுக்குடியிருப்பு – 5,131.13 ஹெக்டயர்
- ஒட்டுசுட்டான் – 7,266.04 ஹெக்டயர்
- துணுக்காய் – 399.80 ஹெக்டயர்
- மாந்தை கிழக்கு – 1,231.37 ஹெக்டயர்
- மணலாறு – 427.28 ஹெக்டயர்
என மொத்தம் 17,469.58 ஹெக்டயர் காணிகள் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, ஏற்கனவே விடுவிக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு மக்களிடம் மீண்டும் ஆவணங்களைக் கோராமல், அவற்றை உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வேறு மாவட்டங்களில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு தாம் கோரவில்லை எனவும், தமது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடமே மீள வழங்குமாறே கோருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.







