2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பொதுத் தராதர சாதாரண தரத்தில் (G.C.E. O/L) வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளில் சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய விடயங்களை தொகுதி அடிப்படையில் (Modules) அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் கற்றல் தொகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்கான தேசிய முன்பள்ளிக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளை உருவாக்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








