நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான யோசனை குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கலந்துரையாடல் வாய்ப்பின் அடிப்படையில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
மேல் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, குறித்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான 22ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான தமது நிலைப்பாட்டை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தது.
மேலும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடனான சந்திப்பின்போதும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
அதற்கமையவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தக் கலந்துரையாடலுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








