‘க்ளீன் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் செயற்படும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் செயலணி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள புதிய கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டம் குறித்தும் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் திட்ட முகாமைத்துவப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தெரிவுசெய்யப்பட்ட நகரங்களை முன்மாதிரி நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், நகர அழகுபடுத்தல், கால்வாய்களை துப்புரவு செய்தல், கழிவுநீர் கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் பூங்காக்களை முறையாக புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதற்காக திட்ட முகாமைத்துவ அலகொன்றை ஸ்தாபிப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் மூன்று பிரதான தூண்களில் இரண்டாகக் கருதப்படும் சமூக மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எதிர்வரும் ஆண்டுக்கான செயற்பாடுகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி செயலணியின் செயலாளரும் அழைப்பாளருமான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) எச்.பி.சி. சுகீஸ்வர உள்ளிட்ட அதிகாரிகளும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அத்துடன், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயலணி உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.








