ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் புதன்கிழமை (09) தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களாக நீடித்து வரும் போரின் தொடக்கத்திலிருந்து கப்பல் போக்குவரத்தை இலக்காகக் கொண்டு இரு தரப்பினரும் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவே மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஐந்து ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்ததற்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களின் பின்னணியில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்படி, பிரென்ட் மசகு எண்ணெயின் எதிர்கால விலை ஜூலை மாதத்துக்குப் பின்னர் முதல் முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இதேவேளை, ஈரானின் சமீபத்திய தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் ஒன்றில் பணியாற்றிய குறைந்தது ஒரு மாலுமி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை இலக்காகக் கொண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், 18 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், ஏனைய இரண்டு ஏவுகணைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விழுந்ததால் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஜோர்டான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படையினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடியாக தமது நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவு (IRGC) எச்சரித்துள்ளது.
அத்துடன், கடலில் புதிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ள ‘அனுமதியற்ற மண்டலம்’ தொடர்பான வரைபடங்களை ஈரான் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள சபாஹார் (Chabahar) கடற்கரைப் பகுதி வரை நீட்டிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தெஹ்ரான் முயற்சித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.








