நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் காலாவதியான பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, 2026/04/16 என காலாவதித் திகதி குறிப்பிடப்பட்டிருந்த ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கு நேற்று (09) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதவான் 200,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதேவேளை, உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றின் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதித் திகதிகளை முறையாகச் சரிபார்க்குமாறு நுகர்வோரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







