எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்களின் செயற்பாடுகளினால் எமது மக்கள் அடைந்த அவலக் குரல், செம்மணியில் மக்களைப் புதைக்கும் போது அவர்கள் பட்ட வேதனைகள், முள்ளிவாய்க்காலில் தாய், தந்தை கண் முன்னே சூடுபட்டு வீழ்கின்ற போது அந்த மக்களின் அழுகுரல் இன்று கர்மா என்ற ரீதியில் விரட்டத் தொடங்கியுள்ளது எனத் தெரிவித்தார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன். அத்துடன், சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதில் ஏன் தாமதமானது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (09) இடம்பெற்ற பாதுகாப்புப் பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது அரசியல் பின்னணியைப் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கேள்வியெழுப்பிய செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
மேலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், உள்ளக விசாரணைகளை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தமது மக்கள் எதிர்கொண்ட துயரங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.








